17.3.11

ஒரு மனைவியின் கதை


அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்க பணமில்லை…
நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்க பணமில்லை…
எப்படிப்பட்ட பெற்றோர் நாங்கள்!’

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி.
அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ்.
ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.
அரசியல், சமூகச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் போன்ற பல விஷயங்களை வெஸ்ட்பாலன் மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் நிறைய விவாதிப்பார்கள். ஜென்னிக்கு கவிதைகள் மீது தீராத ஆர்வம்.
அன்பும் பண்பும் திறமையும் கொண்ட ஜென்னியை எல்லோருக்குமே பிடித்துப் போகும். மார்க்ஸுக்கும் ஜென்னியைப் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.
பள்ளி இறுதி ஆண்டில், ‘எதிர்கால வேலை’ என்ற தலைப்பில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதில் மார்க்ஸ் எழுதியவை…
‘மனிதன் என்பவன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்ல. அவன் சக மனிதனுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளராக இருக்கலாம், நல்ல நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது. மனிதகுலத்தின் பெரும்பான்மைக்குப் பயன்படக்கூடிய ஒரு வேலையைச் செய்தால், அதில் வரும் எந்தத் தடையும் நம்மை ஒன்றும் செய்துவிடாது. நம் தியாகத்தால் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் இருக்கும் உண்மையான சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும். அதுபோன்ற பணியையே நான் விரும்பி ஏற்கப் போகிறேன்.’
ஜென்னிக்கு மார்க்ஸைப் பிடிக்க அவருடைய அறிவும் மக்களுக்கான சிந்தனைகளும்தான் காரணம்.
தன்னைப் போலவே மார்க்ஸும் வழக்கறிஞராக வேண்டும் என்று அவர் அப்பா நினைத்தார். பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் பிரிவு துயரத்தை அளித்தாலும் இருவரும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். மார்க்ஸ் தொடர்ந்து ஜென்னிக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதம் முழுவதும் காதல் கவிதைகளால் நிரம்பி வழியும். ஜென்னியும் இலக்கிய ரசம் மிகுந்த, காதல் கடிதங்களை வீட்டுக்குத் தெரியாமல் எழுதுவார்.

ஜென்னி – மார்க்ஸ் காதல் மார்க்ஸின் அப்பாவுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர் பயந்து போனார். தன் குடும்பம் மிகவும் சாதாரணமானது. ஜென்னியின் குடும்பம் செல்வாக்கு மிக்க பணக்காரக் குடும்பம். இவர்களின் காதலால் அருமையான நண்பர் வெஸ்ட்பாலனின் நட்பு உடைந்துவிடுமோ என்று நினைத்தார். ஜென்னியிடம் மார்க்ஸைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றார். மார்க்ஸிடம் காதலைத் துறந்துவிடும்படி கடிதம் எழுதினார். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை.
***
தத்துவத்தின் மீது மிகவும் ஈடுபாடுகொண்டார் மார்க்ஸ். புரட்சிகரச் சிந்தனையாளர்களின் இளம் ஹெகேலியர் இயக்கத்தில் இணைந்தார். 23 வயதில் டாக்டர் பட்டம் பெற்று ட்ரியர் திரும்பினார் மார்க்ஸ்.
அப்போது மார்க்ஸின் அப்பாவும் ஜென்னியின் அப்பாவும் மறைந்திருந்தார்கள். ஜென்னியின் அம்மாவுக்கு இவர்களின் திருமணத்தில் விருப்பமில்லை. திருமணம் தள்ளிப்போனது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 29 வயதில் ஜென்னி தன் அன்புக்குரிய மார்க்ஸை மணந்துகொண்டார்.
‘ரைனிஷ் ஷெய்டுங்’ பத்திரிகையில் அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ், விரைவில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரானார். கோபமுற்ற அரசாங்கம் அந்தப் பத்திரிகையைத் தடை செய்தது. மார்க்ஸை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது.
மார்க்ஸும் ஜென்னியும் பிரான்ஸ் சென்றார்கள். சிறிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் திருமணத்தின் போது கிடைத்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்திருந்தார் ஜென்னி. அந்தப் பெட்டி எப்போதும் திறந்தே இருக்கும். பணம் தேவைப்படும் நண்பர்கள் அந்தப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தங்களால் பிறருக்கு உதவ முடிவதை நினைத்து ஜென்னியும் மார்க்ஸும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.
1844-ம் ஆண்டு ஜென்னி பெண் குழந்தைக்குத் தாயானார். தன் அன்பு மனைவியின் பெயரையே குழந்தைக்கு வைத்தார் மார்க்ஸ்.
ஜெர்மன் – பிரெஞ்சு புத்தகங்கள் தயாரிப்பில் ரூகேயுடன் சேர்ந்து வேலை செய்தார் மார்க்ஸ். அப்போது பிரெடரிக் ஏங்கெல்ஸ் அறிமுகம் கிடைத்தது.
***
இரண்டு ஆண்டுகளில் கையில் இருந்த பணம் காலி. ஜென்னிக்குப் பொருளாதாரக் கஷ்டம் வர ஆரம்பித்தது. அப்போது பிரஷ்யாவில் நெசவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. நெசவாளர்களுக்கு ஆதரவாகக் கட்டுரைகள் எழுதினார் மார்க்ஸ். கோபம் அடைந்த பிரஷ்ய அரசாங்கம், பிரான்ஸில் இருந்து மார்க்ஸை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியது. மார்க்ஸ் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, கிடைத்த பணத்தில் குழந்தைகளுடன் பிரஸ்ஸல்ஸ் போய்ச் சேர்ந்தார் ஜென்னி.
ஜென்னியின் அம்மா மகளுக்கு உதவி செய்வதற்காக ஹெலன் டெமூத் என்பவரை அனுப்பி வைத்தார். மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தான். ஜென்னியும் மார்க்ஸும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.
அங்கும் அரசாங்கத்தை எதிர்த்து எழுத தடை வந்தது. மார்க்ஸுக்கு வருமானம் குறைந்தது. பிரான்ஸில் மன்னராட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் வழிகாட்டலில் அமைந்த கம்யூனிஸ்ட் லீக் போராட்டங்களை ஒன்றிணைத்தது. லூயி மன்னன் நாட்டை விட்டு ஓடினார். இடைக்கால அரசாங்கம் மார்க்ஸை அழைத்தது.
கிளம்புவதற்குள் ஒருநாள் நள்ளிரவு திடீரென்று மார்க்ஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பதறிப்போன ஜென்னி, அவரைப் பின் தொடர்ந்து சென்றார். ஜென்னியையும் கைது செய்து, சிறையில் தள்ளினார்கள். அந்தச் சிறையில் குற்றவாளிகள் நிரம்பியிருந்தனர். ஜென்னிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஒருபுறம் கணவர் கைது, இன்னொரு புறம் குழந்தைகள் தனியாக இருந்தனர். தாங்க முடியாத குளிர். சகிக்க முடியாத இரவாக அமைந்தது. மறுநாள் ஜென்னி மறுநாள் விடுதலை செய்யப்பட்டார். அம்மாவும் அப்பாவும் கைது செய்யப்பட்ட விஷயத்தால் பயந்துபோயிருந்த குழந்தைகள் ஜென்னியைக் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டனர். மார்க்ஸும் விடுதலையானார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, பிரான்ஸுக்குச் சென்றார்கள்.
***
மீண்டும் அரசியல் சூழ்நிலை மாறியது. மார்க்ஸை வெளியேறும்படிச் சொன்னது. மார்க்ஸ் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு ஹென்ரிச் என்ற குழந்தை பிறந்தது. மார்க்ஸ் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியில் இறங்கினார்.
மார்க்ஸின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அவர் எழுதும் கட்டுரைகள், புத்தகங்களை ஜென்னி பிரதியெடுப்பார். தன்னுடைய கருத்துகளை மார்க்ஸுடன் விவாதிப்பார். மார்க்ஸும் ஜென்னியின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார்.
1850-ம் வருடம் மிகவும் மோசமான காலகட்டம். பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். உதவி செய்யவும் ஆள்கள் இல்லை. ஜென்னி உதவி கேட்டு நண்பருக்குக் கடிதம் எழுதினார்.
‘சரியான ஆகாரம் இல்லை. முதுகிலும் மார்பிலும் கடுமையான வலி. என் மார்பில் பால் சுரக்கவில்லை. குழந்தை பசியில் பலமாக உறிஞ்சியதில் தோல் வெடித்து, ரத்தம் அவன் வாயில் கொட்டியது… எங்களின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், அதைப் பெறுவதுக்குக்கூட நாங்கள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது…’
ஒருநாள்…
‘ஜென்னி, நான் உனக்குத் தாங்க முடியாத கஷ்டத்தை அளித்து வருகிறேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது…’
’நாம் என்ன நமக்காகவா போராடுகிறோம்? பாட்டாளி மக்களுக்காகத்தானே போராடுகிறோம். அந்தப் போராட்டம் எந்தவிதத்திலும் என்னை நிலைகுலையச் செய்துவிடாது கார்ல். என்னை நினைத்து வருந்தத் தேவையில்லை. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவள். எனக்கு ஆதரவாக அன்பான கணவனாக நீ இருக்கும்போது எந்தக் கஷ்டமும் என்னை ஒன்றும் செய்துவிடாது…’
‘நீ என்ன சொன்னாலும் நம் வாழ்க்கை மிகவும் கடினமானது ஜென்னி.’
‘என்னுடைய கவலை எல்லாம் இதுபோன்ற பிரச்னைகளில் நீ கவலை அடைய வேண்டியிருக்கிறதே என்பதுதான். உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் இன்னும் நல்லவிதமான சூழல் அமைந்திருக்கலாம் கார்ல்.’
’நீயும் குழந்தைகளும்தான் என்னுடைய சந்தோஷங்கள் ஜென்னி. உங்களைப் பார்க்கும்போது எந்தக் கவலையும் என்னை அண்டுவதில்லை.’
வாடகை கொடுக்க முடியாததால் பல வீடுகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரஷ்ய அரசாங்கம் மார்க்ஸ் மீதும் அவருடைய தோழர்கள் மீதும் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியது. ஜென்னிக்கு நரம்புத்தளர்ச்சி நோய் வந்தது. சிகிச்சைப் பெற வழியில்லை. சில காலங்களில் எட்வர்டுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. பரிதாபமாகக் குழந்தை இறந்துபோனது. ஜென்னியையும் மார்க்ஸையும் மகனின் இறப்பு மிகவும் பாதித்தது.
ஏங்கெல்ஸ் மற்றும் சில நண்பர்கள் அளித்த உதவியில் குடும்பம் பிழைத்தது. மார்க்ஸ் மீது கொலோன் கம்யூனிஸ்ட் சதி வழக்கு போட்டது பிரஷ்ய அரசாங்கம். அதிலிருந்து மீண்டு வருவதற்காக மார்க்ஸ் நிறைய உழைத்தார்.
சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மகள் பிரான்சிஸ்கா, இறந்து போனாள்.
‘என் அருமை மகள் இறந்த துக்கம் ஒருபுறம். அவளை அடக்கம் செய்வதற்குப் பணமில்லாதது இன்னொருபுறம். ஐயோ… எந்த அம்மாவுக்கும் இந்தக் கொடுமை வாய்க்கக்கூடாது. அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்க பணமில்லை… நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்க பணமில்லை… எப்படிப்பட்ட பெற்றோர் நாங்கள்!’ ஜென்னி கதறினார்.
வேறுவழியில்லை. பக்கத்து அறையில் இறந்த மகளை வைத்துவிட்டு, மீதிக் குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் ஜென்னியும் மார்க்ஸும் அழுதனர். நண்பர் ஒருவர் இரண்டு பவுண்ட் கொடுத்து, சவப்பெட்டி வாங்க உதவினார்.
அடுத்த சில ஆண்டுகளில் எட்கர் என்ற 8 வயது மகனும் இறந்துபோனான்.
‘நம் அன்பு குழந்தைகள் நான்கு பேரை இழந்த துயரம் என்னால் எப்போதும் தாங்கமுடியாத வலியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது கார்ல். அவர்களை நினைக்கும்போது என் ஆயுள் நீடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை…’
ஏழில் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஏங்கெல்ஸ் அழைப்பின் பேரில் மார்க்ஸும் ஜென்னியும் சில காலம் அவர் வீட்டில் தங்கியிருந்தனர். மார்க்ஸ் ‘மூலதனம்’ எழுத ஆரம்பித்தார். ஒவ்வொன்றையும் சளைக்காமல் பல முறை பிரதி எடுத்துக் கொடுத்தார் ஜென்னி.
ஜென்னியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தவுடன் ஜென்னியும் குழந்தைகளும் அங்கு சென்றனர். பேத்திகளைக் கண்ட ஜென்னியின் அம்மா மகிழ்ந்து போனார். அங்கு சில காலம் தங்கியிருந்தார் ஜென்னி.
ஜென்னியின் பிரிவைத் தாங்க முடியாத மார்க்ஸ் கடிதம் எழுதினார். ‘அன்பு நிறைந்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது!’
தாய் இறந்த பிறகு அவருக்குக் கிடைத்த சொத்துடன் வந்து சேர்ந்தார் ஜென்னி. ஓராண்டு பொருளாதாரப் பிரச்னையின்றி வாழ்ந்தனர். நண்பர்கள், அகதிகள் போன்றவர்களுக்குத் தேடிப் போய்ப் பண உதவி செய்தார் ஜென்னி…
***
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மார்க்ஸ் எழுதி வந்த கட்டுரைகள் குறைந்து போயின. அழையா விருந்தாளியாக வறுமை வந்து உட்கார்ந்துகொண்டது. வளர்ந்த குழந்தைகள் வீட்டில் இருந்தே படித்தனர். நாள்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமானது. மார்க்ஸ் வேலை தேடினார். கையெழுத்து மோசமாக இருந்ததால் வேலை கிடைக்கவில்லை. குழந்தைகளைத் தத்து கொடுத்துவிட்டு, ஏழைகள் வசிக்கும் இல்லத்தில் தானும் ஜென்னியும் சேர்ந்துவிடலாம் என்று கூட நினைத்தார் மார்க்ஸ்.
மீண்டும் உதவிக்கு வந்தார் ஏங்கெல்ஸ். நண்பர் ஒருவர் மார்க்ஸுக்கு சொத்து எழுதி வைத்து, இறந்து போனார். அதன் மூலம் மூலதனம் நூல் வெளியிடப்பட்டது.
‘இன்று மகத்தான நாள் கார்ல். நம் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.’
***
மார்க்ஸின் இரண்டு பெண்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளில் பேரன், பேத்திகள் என்று மார்க்ஸின் குடும்பம் விரிவடைந்தது. மார்க்ஸ் வீட்டுக்கு அருகிலேயே ஏங்கெல்ஸும் குடிவந்தார். ஒருவழியாக வறுமை விலகியிருந்தது. வாழ்க்கையில் இனிமை வந்து சேர்ந்தது.
1880-ல் ஜென்னி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அது குணமளிக்க முடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மார்க்ஸ் இடிந்துபோனார். ஜென்னியின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். தன் பொருட்டு தன் கணவரோ, குழந்தைகளோ வருத்தப்படக்கூடாது என்று நினைத்த ஜென்னி, தன் நோயின் வலியை மறைத்துக்கொண்டு, நகைச்சுவையாகப் பேசினார்.
விரைவிலேயே மார்க்ஸும் நுரையீரல் நோயால் தாக்கப்பட்டார். தனியறையில் வைக்கப்பட்டார். பல வாரங்கள் ஜென்னியும் மார்க்ஸும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஓரளவு நோய் குணமானதும் மார்க்ஸ் ஜென்னியிடம் வந்தார்.
‘பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தும் நம்மால் பார்க்க முடியாதது கொடுமையான விஷயம் ஜென்னி.’
‘ஆமாம் கார்ல். எவ்வளவோ காலம் நாம் பிரிந்து வசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் இந்தப் பிரிவு இவ்வளவு வலியைத் தந்தது இல்லை. உன் ஒரு கடிதம் அத்தனை துன்பத்தையும் மாயமாக்கிவிடும்.’
‘அன்பு ஜென்னி, நம் வாழ்க்கையில் நீ இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் பெற்றிருக்கிறாய். மிகவும் வருத்தமாக இருக்கிறது…’
‘இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம்.’
பதில் சொல்லாமல் மார்க்ஸ் ஜென்னியின் கைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.
‘நம் கஷ்டங்களை மறந்துவிட்டேன் கார்ல். மீண்டும் ஒருமுறை வாழும் வாய்ப்புக் கிடைத்தால், நீயே கணவனாகவும், இதே கஷ்டங்களுடனும்தான் வாழ விரும்புகிறேன், கார்ல்.
மூலதனம் நூல் ஜெர்மனியில் மூன்றாம் பதிப்பு வர இருப்பதாகக் கேள்விப்பட்டேன். லண்டன் பத்திரிகை உன்னை சோசலிச சிந்தனையாளர் என்று கூறியிருக்கிறது. ஜெர்மன் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இவை எல்லாவாற்றையும் விட சந்தோஷம் வேறு உண்டா கார்ல்? நம் உழைப்பு வீணாகிவிடவில்லை. உலகம் முழுவதும் உன் சிந்தனை பரவும், பாட்டாளி வர்க்கம் பயன்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’
1881. டிசம்பர் 2. ஜென்னி இறந்து போனார். மார்க்ஸ் சுயநினைவிழந்தார். ஜென்னியின் இறுதிச் சடங்குகளை ஏங்கெல்ஸ்தான் செய்தார். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் தன்னை இழந்துவிட்டார். 15 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ஜென்னியின் புகைப்படத்தை கையில் வைத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.
***
ஜென்னி நினைத்தது போலவே மார்க்ஸ் உலகம் முழுவதும் அறியப்பட்டார். மார்க்ஸின் சிந்தனையால் உலகம் பல மாற்றங்களைக் கண்டது. பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆயிரம் ஆண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் யார் என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸை உலக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.


...ஈழத்தின் வடபுலத்தில் ஓரூர் மட்டுவில் அதன் வரலாற்றுப் பெயர் சந்திரபுரம்.......





உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் பொங்கி எழுகின்றதா... அப்படி என்றால் நீங்களும் எனது தோழரே... சே குவேரா..

கவிதைகள்சில
~~~~~~~~~~~~~~~


To Isaipriya

My Sister,
My Mother,
My Comrade

by Karthik RM
on December 15, 2010

Many a disease plagues this world
But none so devastating
as the silence of those
that can speak.
I speak today,
I cry today,
for you. My Sister,
My Mother, My Comrade.

My Sister! With music
in your name.
The ‘isai’ of your sacrifice
like that of my other sisters
Manorama, Nilofar, Phulmoni
will be sung for ages to come
in songs of our resistance
This I promise,
your brother, a sorry being
whose only weapons
are his words.

My Mother! I was born
as your son the day
the child of your womb
was killed. Mother,
I am your son.
As I am the son of the mothers
of Eelam, Kurdistan, Palestine.
A son who seeks justice
for unheard voices,
for untold horrors,
for unspoken miseries.
A sorry being, your son,
whose only weapons
are his words.

My Comrade! I claim to live
(rather shamelessly)
for the cause you died for,
a people longing for freedom,
a soil aching for peace,
a love for life,
now facing despair,
now facing death.
As my eyes see
what has been done to you
tears pour – as words.
Words. The only weapons of
a sorry being, your comrade.
Oh dove of freedom
torn apart by vultures of lust!
Oh lamb of peace
prey to jackals of power!
Oh angel of justice!
Oh goddess of liberty!
She lies there, naked
and ravaged
by creatures called ‘men’
Disrobed was not your body,
but the farce called Lanka.
Violated was not you,
but the notion of humanity.
Raped, again and again,
was the silence
of those that can speak,
but who chose not to.
But I speak today,
I cry today.
Your sibling, your son,
your comrade.
Now a man.
Now a walking corpse.
Whose only weapons
are his words.
As of now…






தமிழீழத் தமிழச்சி

தமிழீழத் தமிழச்சி
என்பதால்
என் தாயும்
விதவையே
என் சகோதரியும்
விதவையே
என் நண்பியும்
விதவையே.....!
அன்று
கிருசாந்தியை புதைத்த போது
வாய் பொத்தியிருந்தாய்
இன்று
தர்சினியை எரித்த போது
கண் மூடியிருந்தாய்
உனது
பலதடவை
அறியாமையினால்
எம்மின தமிழ்ப் பெண்கள்
இப்ப
எம்மோடு இல்லை....!
எங்கள்
மிஞ்சியிருக்கும்
கண்மணிகளை
தமிழகத்துக்குள் ஒழித்து
வைத்தால் – அங்கையும்
கருணாநிதியின்
மோப்ப நாய்கள்
பெண்ணாய்
பிறந்த எமக்கு
ஈழத் தமிழச்சியாக வாழ....???

பா.சதீஸ்


கருவறைக் கண்ணீர்

வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே
உன் கருவிலிருக்கும்
கடைசி மகள் எழுதும்
கண்ணீர் கடிதம்.
உனது கருவறைச்
சுவர்களில் – எனது
சுட்டு விரல் தீட்டும்
ஓவியம் புரிகிறதா? –நீ
பிரசவித்த என்
முன்னவர்களைக் காணோமென்று
கதறும் ஒலி என்
காதுகளுக்கு கேட்கிறது.
காணமல் போன அண்ணா,
காலில்லா அப்பா,
தடுப்பு முகாமில் மூத்தவன்,
பருவ வயதில் இளையவள்
ஓட்டைக் கூடாரத்தில்
கிளிந்த துணியுடன் நீ
இதற்கிடையில்
நான் ஏனம்மா ….?


எம் தேசம்...!!!

ஊர்திகளின் ஓய்வற்ற அணிவகுப்பால்
ஊமையாய் கண்ணீர் விட்டு,,
வாடி வதங்கி போய் விட்ட நெடுஞ்சாலை...!!

நெருக்கடியும்,,நெரிசலுமாய்
நெளிகின்றது எம் தேசம்...!!
செப்பனிடப்படாத வீதிகள்..
செத்து பிழைக்கின்றன..!

புது புது இன வரவுகளால்,,
புத்துயிர் பெற்று விட்ட வீதியோர
புல்பூண்டுகள்...!!

பதரோடு, மிதிவெடியும்
பதுங்கி கிடக்கும் என்று,,,எம்மவர்
கைவிட்டு காடாகி போன
வீதியோரமெங்கும்...
கல் வைத்து தீ மூட்டி,,,
கதிரை போட்டமர்ந்து,,,
கை நனைக்கும் வேற்றின மக்கள் தொகை..
குடியிருக்கும் தமிழனை விட அதிகமாய்...!!

பூர்விகமாய் காலங்காலமாய்..
குடியிருந்த எம்முறவுகளை...
காணவில்லை...
எம்மண்ணிலே....

சுற்றுலா என்று..
சுற்றி பார்க்க வருபவர்கள்...
அநாதரவான நிலத்திலே...
அத்து மீறி நிரந்தரமாய்
குந்தி விட்டாலும்...
ஆச்சரியப்படுவதற்கில்லை...!!

ஆக்கிரமிப்பையும்
அடிமைத்தனத்தையும்
ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட இனம்
அல்லவோ எம்மினம்..!!!
அதனால் - இந்த
அத்துமீறலையும்
அன்போடு ஏற்றுக்கொள்ளட்டும்...!!

- அரசி -

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


ராஜாவே உனக்கென்றே
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
சுஜாதா


கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

சர்வதேச குழந்தைகள் வருடம் அறிவிக்கப்பட்டபோது, சுஜாதா எழுதிய கவிதை இது.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நில் கவனி
யாரிந்த முத்துக் குமார்?





குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!

இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் -
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!

தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் -
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!

யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில்
நெருப்பெய்தி அறிவித்தவன்!

தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ்,
வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் –
திரும்பிப் பார்க்க வைத்தவன்!

குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை - ஈழம் வரையென எரிந்து
கருகி கர்ஜித்தவன்! தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில்
அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள –
உயிர் மை கொடுத்தவன்!

ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று -
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு –
நினைவு கொள்வோம்!

வித்யாசாகர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2010

நான்
போட்டி
பொறாமை
காட்டிக்கொடுப்பு
கட்சி
ஏற்றம்
தாழ்வு
அடிமைத்தனம்
மாற்றமில்லா பூமியில்
ஆண்டின் மாற்றமும்
அதன் வேகமும்
பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்றபடி
வந்தும் போய்க்கொண்டும்தான்.

இதைவிடப்
போர்
நோய்
இயற்கை என
அழிப்புக்களும் இடைக்கிடை.
வருந்தாத வருஷம் மாறியபடிதான்.

நாயும் நரியுமாய்
போட்டி போடும் அரசியலின்
நடுவில் இறைச்சித் துண்டாய்
என் இனம் என் தேசத்தில்.
பசி வறுமையோடு
இரத்தம் தோய்ந்த வருடம்
அங்கும் சிவப்பாய் வந்தபடிதான்.

என்றாலும் பனிபடர்ந்த பூமிக்குள்
என் வெப்பக் கண்ணீர் தெளித்தே
உரு(க்)கியபடி வழ்ந்துகொண்டிருக்கிறேன்.

தீபாவளி புத்தாண்டு என்றில்லாமல்
நித்தம் சிவப்பு வைனும்
ஆட்டிறைச்சியும்
முட்டையும்
சலாட்டுமாய்த் தின்று
திடமாயிருக்கிறேன்.

எப்படிச் சொல்ல நான்
என் இனத்திற்கு
"உங்களுக்கு வாழ்த்து" என்று.
வாழ்கிறார்களா அவர்கள் !!!

ஹேமா
(சுவிஸ்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாங்கவா
தைப்பாவாய்!


வானம் விழுந்துருகி
மாகடலும் நீராடி
மான நிலமெங்கும்
வண்டல் கரைந்தோடிக்
கானம் எடுத்துவந்து
காற்றுக் குளிர்ந்தாடித்
தேனார் வயல்மருங்கில்
செந்நெல் விளைந்தாடித்
தானம் தவமிரண்டும்
தங்கக் குலம்பாடிப்
போன தலைமுறைகள்
பொங்கிக் களித்ததெலாம்
ஈனத் தரக்கர்களால்
இன்று அழிந்ததடி
மானே வதையெல்லாம்
மாற்றவா தைப்பாவாய்!

பேயாய் அரக்கரொடும்
பிசாசுப் படைகளொடும்
தீயாய் எரிந்தநிலம்
தீம்புனல்கள் நச்சாகித்
தாயும் மடியுறங்கும்
தங்கக் குழந்தைளும்
ஆயதந்தை மைந்தர்
அறிவார்ந்த ஏந்திளையர்
தோயக் கொலையாடித்
துடிக்கச் சதிராடித்
தூய தமிழினத்தைத்
செக்கிற் புதைத்தவர்கள்
நாயாய் இருந்துலவி
நரியான வேளையிலே
தாயே மணிநிலத்தைத்
தாங்கிவா தைப்பாவாய்!

- புதியபாரதி


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்பேறு! தவப்பேறு!

தாய்மொழி என்பது தாயின்மொழி- அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் மொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தமொழி – அது
அன்னையின் கருவில் வந்தமொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டமொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்டமொழி!

தோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
தொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டுமொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டுமொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் பொங்கி
தவிப்புடன் உன்னைக் கொஞ்சுமொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சுமொழி!

தொல்லைகள் அறியாப் பருவத்திலே – நீ
துருதுருத் தாடிய உருவத்திலே
பல்லுமில் லாமல் சொல்லுமில் லாமல்
பலகதை சொல்லிய மயக்குமொழி – அது
பயிலுமுன் பேசிய இயற்கைமொழி!

உன்னுடன் இணைந்தே பிறந்தமொழி – உன்
உள்ளமும் உணர்வும் புரிந்தமொழி
எண்ணியல் என்ன மின்னியல் என்ன
எதையும் பயின்றிடச் சிறந்தமொழி – அது
இறைவன் உனக்கென வரைந்தமொழி!

தமிழினம் எய்திய பெரும்பேறு – அது
தாய்மொழி தமிழெனும் அரும்பேறு
அமிழ்தினை உரிமை அடைந்தவர் யாரும்
அருந்தா திருந்தால் அவப்பேறு – தமிழ்
அமிழ்தம் அருந்துதல் தவப்பேறு!
மலேசியப் பாவலரும்
தொல்காப்பிய அறிஞருமாகிய
கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா கொண்டுவந்த ஆப்பிள்

சிலகாலத்துக்கு முந்தி
அது.
அப்பம்மா சாக முதல்
சந்திரிக்காவின் காலத்தில்
கொழும்பில் இருந்து
அப்பாவுடன் வந்திருந்தது.

இலைகள் எல்லாம்
பழுப்பாக உதிர்ந்தனவாம்
அந்தக்காலத்தில்..
சொல்லுவார்கள்.

எல்லோருக்கும் போதவில்லை
ஒரு அப்பிள்.
சின்னக்கீலமாக ஓன்றும்
அம்மா கடித்ததில்
பாதியுமாக
என்பங்கு கிடைத்தது.

கொழும்பில் இருந்து
யாழ்ப்பாணத்திற்கு பயணித்திருந்தது
அந்த
சின்னச் சிவப்பு அப்பிள்.
வெட்டவே மனமில்லை எனக்கு.
நீண்டதூரம் பயணித்திருந்தும்
கம்பீரமாய்ப் பளபளத்தது.
கிளாலிக்கடலில்
சூட்டுச்சத்தத்துக்கு பயந்து
அப்பாவின்
கால்சட்டைக்குள் ஒளித்துக்கொண்டதாம் அது.

அப்பாவின் தடவலில்
அதன்
காம்பு மடங்கி நிமிர்ந்தது….

அந்தச்சேற்றுக்காட்டுப்பாதைகளில்
எல்லாம்
நிலவுடன் பேசிக்கொண்டு
அப்பா நடக்கும்போது தன் அழகை
நிலவுடன் ஒப்பிட்டு
பீற்றிக்கொண்டதாம்.

தன்
சின்ன மகனைப்பற்றி
அப்பாவின் பேச்சைக்கேட்டு
அமைதியான
வெள்ளைப்பனி கொட்டும்
தனது நாட்டைப்பற்றி
உச்சியில் தெரிந்த பராலைட்டை
உற்றுப்பார்தவாறு
ஏக்கமாக முணுமுணுத்ததாம் அப்பிள்.

தலைக்குமேல் கீச்சிட்ட
ஷெல்லி;ன் சிதறல்களிடம் தப்ப
தலைமேல் கைவைத்ததை
அதேபோல் நடித்துச்
சேட்டை செய்ததாம் அது.

தொண்டை வறண்டு
சொண்டுவெடித்த நேரங்களில்
அரோகராச்சொல்லி

உதவிசெய்ததாம் அந்த அப்பிள்.

தட்டிவானில்
சாவச்சேரி தாண்டும்போது
வானின் துள்ளலுக்கேற்ப
லயத்துடன் வந்த
அப்பிளின் பெருமூச்சு
காற்சட்டையில் வெப்பமாக படிந்ததாக அப்பா சொன்னார்.

மிஞ்சிப்போன
அப்பிளின் காம்பை
புத்தம் ஒன்றினுள் வைத்தேன்.
நெடுங்காலம்
இந்த அப்பிளின் கதையை
மக்கள் சொல்லித்திரிவார்கள்
அப்பாவுக்கு நான்
உறுதி சொன்னேன்.

ஆதாரத்திற்கு
அந்தக் காம்பு இருந்தது என்னிடம்.
இரண்டுபக்கமும் அழுத்தப்பட்டு
சப்பையாய்ப்போய்..

ஆதாரத்திற்கு
அந்தக்காம்பு இருந்தது என்னிடம்.

சேரன்கிருஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈழ சகோதரர்கள்

ஒரு சொற்ப கதறலாக இருக்கலாம்
யாருக்கும் கேட்காத அளவிற்கு
இரைச்சலாக இருக்கலாம்
அழுது வடியும் கண்ணீரின்
சோம்பல் ஒலியாக இருக்கலாம்
கைகளை நீட்டி அவர்கல் கேட்பது
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு சராசரி வாழ்க்கையைத்தான்.










அகம் விரிகிறது
ஒவ்வொரு துளியிலும்
ஒவ்வொரு இழப்பிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு நகர்விலும்
ஒவ்வொரு கால்களிலும்
ஒவ்வொரு முதுகு மூட்டைகளிலும்
அகம் ஒரு நாடாகியிருந்தது
நான் அகதியாகிருந்தேன்

விட்டுவந்த இடங்களிலெல்லாம்
திட்டுத்திட்டாக வீடுகளும்
மனிதர்களும்

கே.பாலமுருகன்

~~~~~~~~~~~~~~~
தும்பினியின்
இடுப்பினில்
தெரியுது
தமிழீழம்














சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!
தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று…
ஆக்கிரமிப்பு படைகளோடு
தும்பினியின் இடுப்பாட்டத்தில்
சதியோடு குதி போடுறோம்..
தெரியுது தமிழீழம்..
சிங்களச் சீமைப்பசுவின்
சிற்றிடையில் என்று
வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
எல்லாம் மாய மான் விளையாட்டு..
பிரபாகரன் எனும்
பெரும் வீரன் இருந்த
பயத்தில்..
உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..
அன்றும் இன்றும் என்றும்
எங்கள் வாழ்விடம்..
சிங்களப் பாசறை..!
அங்கே நாங்கள்
சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..
சிங்களத்தி
தும்பினியின்
இடுப்பினில் தெரிவது
தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க – தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
“நிரந்தர” விடுதலை..!
அதுவரை
எப்போதும்..
புலி எதிர்ப்பே
எங்கள் தாகம்..!

http://kuruvikal.wordpress.com/

~~~~~~~~~~~~~~~
யாரு
சாகடிச்சாங்க
அவரை

அவரு செத்துட்டாருன்னு
சொல்றாங்க
அவரோட படத்தை காட்டினாங்க
அவர் மகன் செத்ததாக
சொன்னாங்க அவன் படத்தையும்
போட்டாங்க
செத்தது அவங்க இல்லைங்க
எங்களோட நம்பிக்கை
அவரு என்ன செஞ்சாருன்னு
உனக்குன்னு கேட்டாங்க
எனக்காக போராடினாருன்னேன்
நிறைய பேர கொன்னாரு
நிறைய பேருக்கு எதிரியானாருன்னு
நிறைய தப்பு செய்தாருன்னும்
சொன்னாங்க
தமிழனா பிறந்து
தமிழனுக்கு போரிடியதுதான்
பெரிய தவறோன்னு நினைக்க தோணுதுங்க
எட்டாப்புதான் படிச்சாருன்னாங்க
எத்தனை வகுப்பு அதிகம் படிச்சவந்தான்
அவரை காட்டி கொடுக்கிறானன்
என்ன செய்ய படிப்ப வச்சுங்க
அவரு இருந்தப்ப எல்லாரும்
பயந்தாங்க
என்னை அடிச்சா அவரு வருவாருன்னு
இப்ப என்னை கொன்னாலும்
யாருங்க வருவாங்க
தத்துவம் கம்யூனிசம் எதுவும்
தெரியாதுங்க அவருக்கு
ஆனா எங்களுக்கு ஒண்ணுன்னா
அவர் வருவாருன்னு
என்னோட விரோதிக்கும் தெரியுங்க
எங்களுக்கு கஞ்சி
இல்லாம போச்சு
நாதியில்லாம போச்சுங்க
பெரிய பெரிய விசயம் பேசினவங்க
ஒண்ணு மட்டும் செய்யுங்க
அவரு செஞ்சதுல கால்வாசி
செய்யுங்க
அப்பதாங்க அவர குறைசொல்ற
தகுதி வருங்க
அவரு பெரிய சண்டைகாரருங்க
கோபக்காரருங்க
அவரு ஜெயிச்சப்ப எல்லாம்
பாராட்டுனாங்க
தோத்ததும் அவர திட்டுறாங்க
இவங்கல்லாம் எதையாவது
புடுங்கட்டுங்க அவர்தான்
இல்லைன்னு சொல்றாங்களே
அப்படியே இருக்கட்டுங்க
இவங்க எதாவது செய்யட்டும்
இனிமேலாவது குறை சொல்றத
நிறுத்திபுட்டு
நிசமா சொல்றேங்க
அவரோட துவக்கு இன்னும்
இருக்குங்க
அது துரோகிகளை இன்னும்
மறக்கலைங்க
நீங்க பார்க்கதான போறீங்க
என்ன நடக்குதுன்னு
ஆனா சொல்றேங்க
ரொம்ப நாளைக்கு
நாங்க அடிவாங்க மாட்டோங்க
நாங்க அடிச்சோம்னா
அப்புறம் நீங்க இருந்த
இடமே இருக்காதுங்க
வரேங்க

--
தியாகு
கணினிப்பொறியாளர்
தமிழ்நாடு

வாயடைத்துப்
போனோம்

முருகையன்

'என் நண்பா, மெளனம் எதற்கு?'
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

கவிஞராகவும், பத்திரிகையாளராகவும்,
இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர்
சந்திரபோஸ் சுதாகர்.
இவர் கடந்த 16-04-2007 இரவு
சிங்களம் பேசிய ஆயுததாரிகளால்
வவுனியாவில் அவரது வீட்டில்
வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது கவிதை ஒன்று இங்கே


சித்திரவதைக்குப்
பின்னான
வாக்குமூலம்


உன்னை அவர்கள் கைது செய்து
எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்
எனது குழந்தைக்குப் பிடித்தமான
உனது 'சேட் கொலரின்' மடமடப்புச் சத்தம்
இன்னும் அவனது விரலிடுக்குகளில்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
அவர்கள் வாகனங்களோடு
நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்
சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்
கொண்டு வந்திருந்தார்கள்
அது
இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்
எனது குழந்தையின் கண்களில்
எங்களுடனேயே தங்கியிருக்கிறது
அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்
நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும்
கொல்லவுங் கூட முடியும்
அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை
அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்
சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்
நிரூபித்து விட்டது
நிரூபித்து விட்டது
நம்பிக்கை கொள் நீ பேசாதிருக்கும் வரை
உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே
சிறைக் கம்பியிடுக்குகளின் வழி
ரோஜாப் பூக்களின் வாசனையும்
வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்
உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்
நம்பிக்கை கொள்
நீ பேசாதிருக்கும் வரை
அவர்கள் தோற்றுப் போவார்கள்
நிரந்தரமாகவே.

போஸ்நிஹாலே



சு.வி.....மண்ணை யாசித்த ஒரு கவிஞன்


தாயக மண்ணை நேசித்த
கவிஞர் சு. வில்வரத்தினம் அவர்கள்
9.12.2006ல் காலமானார்.
அவரது நினைவாக அவரது
கவிதை ஒன்று இங்கே.


மீண்டும்
உயிர்த்தல்


கல்லறைகள் ஒரு நாட் பெயரும்
அன்று
புதைகுழி நீத்து எம் உணர்வுகள்
உயிர்பெறும்.

சமாதி கட்டியாயிற்று என
ஒருகணம் சந்தோஷத்தோடு
சுகபாணம் அருந்திக் களித்திருப்பீர்
சிறு பொழுதே.
அதற்குள் மீண்டும்
உயிர் பெற்றெழுவோம்.

எதிர் பார்த்திருக்க மாட்டீர்
எம் உயிர்த்தெழலை
உம் திகைப்புகள்
கல்லறையாய் மாற.

முன்னொருகால்
சிலுவை தாங்கிய நாயகனின்
சுவடுகள் இன்னும் அழிந்து படவில்லை
இதோ மீண்டும் அவன்
உயிர்ச் சுவடுகளின் அரவம்
காற்றில் உயிர்க்கும்
ஆடை அசைவின் தொனி.

சிலுவையின் கீழ் அவன்
சிந்திய குருதித் துளிகள்
என்றுமே காய்ந்திலது
இதோ
இன்னும் பச்சையாக
இன்றைக்கும் சத்தியமாய்.

சிலுவையில் அறைந்தவர்களும்
எங்கேயுமல்ல
இங்கேதான் இன்னும்
உயர் பீடங்களில் இருக்கை போட்டுள்ளார்.

முள் முடி சூட்டியவர்
சவுக்கால் அடித்தவர்கள்
ஆணி அறைந்தவர்கள்
இன்னும் உள்ளார்;
இன்னும் உள்ளார்.
ஆட்சி பீடங்களில்
அதிகாரத்தோடு உள்ளார்.

அவர்களின் கொடுமையில்
சிலுவை தாங்குவோர்
சிந்தும் குருதித் துளிகள்
இன்னும் இந்தப்
பூமியை நனைக்கிறது.

ஒடுக்கு முறைக்குள்ளானோரின்
ஒவ்வொரு கல்லறையிலும்
அவர்கள் நினைப்பது போல்
உதிரம் உறைந்து விடுவதில்லை,
உட்கனன்று கொதிக்கும் அது
புதிய உருவெடுக்கும்.
2
சிலுவை ஏற்றுவோர்க்கும்
சிலுவை சுமப்பவர்க்கும்
இடையிலுள்ள முரண்பாடு
இன்று நேற்று எழுந்ததன்று.

மோதி மோதி முரண்பட்டுப் புதிது
குதிர்வது உண்மையே.
ஞானம்-அஞ்ஞானம்
தர்மம்-அதர்மம் என
ஓதிற்றே வேதம் அன்று,
அதுவேதான்.

அந்த வரலாற்றின் ஓட்டம்
என்றும் உறைந்து போவதில்லை
சிந்தும் ஒவ்வொரு வியர்வைத் துளியிலும்
குருதித் துளியிலும் உறைந்து படாமல்
உந்தி எழும் உயிரோட்டம் அதன் இயல்பு.
ஒவ்வொரு புதுத்தளமாய் அது
களம் விரிக்கும்.
தளம் உயர்த்தும்.

இன்றைக்கும் அதன்
இயல்பு உந்தல் நிகழ்வேதான்
உண்மையைப் புதைகுழிக் குட்படுத்திப்
புறம் வீற்றிருக்கும் பொய்மையின் பூச்சுகள்
பொடி உதிர இதோ
உண்மை உயிர்த் தெழுகிறது
. அஞ்ஞான இருட் பாறை
அடைப்புக்குள் அதிர்வுறவரும்
உண்மையின் வெளிப்பாடு சிலவேளை
அசிங்கமாய்ப் படலாம்,
அருவருப்பாய்த் தெரியலாம்.
அவையெல்லாம் பொய்மை சார்ந்த
பூச்சுகள் போலி மதிப்பீடுகள்.

தூண் பிளந் தெழுந்த
நரசிங்க அவதாரத்தின்
பிறாண்டல்களால் பிளவுற்று
உதிரம் வழியும் அசுரனின் வீழ்ச்சி
எழுதப்படுகிறது.
அதன் இன்றைய சாட்சியாய்
இங்கும் நிகழ்வன
புத்தெழுச்சியின் கோலமே!.....

பொத்திக்கிட்டு
போங்கடா!

'சின்னப் பசங்கள எதுக்கு கட்டாயப்படுத்தி சேக்குறாங்க' -
என்று அக்கறைப்பட்டவர்களே!
இப்போது
சின்னஞ்சிறுத் தளிர்கள்தான்
செத்துக் குவிகின்றன..
எங்கே போனீர்கள்?

'கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலத்தான் சாவு' -
என்ற தத்துவஞானிகளே!
இங்கு
பேனா பிடித்தப் பிள்ளைகள்தான்
பிணமாய் கிடக்கின்றன.
எங்கே போனீர்கள்?

'ஒரு அரசாங்க இராணுவம்
எப்படி தன்நாட்டு மக்களையே கொல்லுவாங்க,
சும்மா கதையளக்காத ..' -
என்னும்
அரைவேக்காட்டு அறிவுஜீவிகளே!
புரிகிறது.

இனிமேலும்
அவர்கள் அந்நாட்டு மக்களாய்
சவக்குழியில் குவியமாட்டார்கள்.
எங்கே போனீர்கள்?
இன்னமும்'
அமைதியா பேசித் தீர்க்கவேண்டியதுதான ..
'என்பீர்களேயானால்,
'பொத்திக்கிட்டு போங்கடா.'

--ஞானக்குமரன்


ஆதிக்க கூப்பாடும்,
ஆலகால
விடமும்
பாதிக்க
முடியாது


அழைக்கின்றீர்கள்…. மதிப்பளிக்கிறோம்….
மனிதம் செத்திருக்கும் அனைவரிடமும்
இன்னும் மானுடத்தை எதிர்பார்த்தபடி….
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி… இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க…
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி… இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
எம் உறவு…
எம் வீடு…
எம் ஊர்…
எம் தேசம்..
எங்களுக்கானதை எம்மிடம் சேர்க்க
ஆவன செய்ய உங்களால் இயலுமா?
எங்களை நாங்களே காத்திடத் துணிந்ததை
பயங்கரவாதப் பட்டியலில் இடுகிறீர்! நசியுண்ட எறும்பும் தனைக் காக்கக் கடிக்கும்
அது உங்கள் பார்வையில் பயங்கரவாதமா?
உயிர்வலி எங்களுக்கு…
உணர்வுகளைத் தூக்கிலிட்டு
எங்கள் சாவிற்கு…
எமனுக்கு வரவெழுத எமக்கென்ன தலைவிதியா?
மறுபடியும், மறுபடியும் மரணத்தின் ஓலம்தான்
மண்ணிடையே எமக்கான விதியாக்கப்படுகிறதே.
கண்ணிருந்தும் குருடான கதை உங்களதா?
உலக நாடுகளே!
உங்கள் எவராலும் விதி மாற்ற முடிந்ததா?
தடை போட்டீர்கள்..
காரணக் கதைகள் ஆயிரம் உரைத்தீர்கள்.
அல்லைப்பிட்டி, வங்காலை, வல்லிபுனம், சம்புூரென
எள்ளி நகைக்கிறதே உங்கள் காரணங்கள்
அவை உங்களுக்குப் புரிகிறதா?
வாழ்வுக்காய் எங்கள் போராட்டம்
கொடிய கந்தக நெடியிடையே எம் வாழ்வோட்டம்
புனர் வாழ்வும் முடக்கப்படும் புூமியிலே
ஏதிலிகளாய் எம் வாழ்வும் தொடரும்
புரிகிறதா?……
அல்லது புரியாமலே இன்னும்
உண்மையொளி காணாக் குகையில்
இருள் மூடிக் கிடக்கின்றீர்களா?
கிழக்கு முகம் கறுப்பதில்லை
காலதேவன் கிறுக்கலிலே
சூரியன் இருண்டதில்லை.
கோல விளக்கொளியில் கூறுகெட்ட வாழ்வெமதல்ல..
கந்தகப் பிழம்பிடையே.. களமாடும் புதல்வர்களைக்
கொண்டெழுந்ததே எமது வாழ்வு
திசைவெளிகள் எங்கெனும் இசைவாக்கம் என்பது
எம்மினத்தின் அசையாத வாழ்வுக்கான தவம்.
உயிரெடுத்து உரம் தொடுத்த
எங்களின் தாயகத்து மண்மீட்பை…
ஆதிக்க கூப்பாடும், ஆலகால விடமும்
பாதிக்க முடியாது
ஆதலால்….
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
உயிர் வலிகளை எடுத்துரைக்க…,
உங்களின் மானுட உயிர்ப்பை அளவெடுக்க..
மென்மேலும் எங்களுக்குள்
இன்னல்களைச் சுமந்தபடி….
கரங்களோடு எங்கள்…
கண்ணீரையும் கட்டுப்படுத்தி…
இன்னும் உங்களுக்கு மதிப்பளித்து வருகிறோம்.
-- வல்வை சகாறா.
இறந்துவிடு!

க.வாசுதேவன்

அம்மா
இனி
நீ
இறந்து
விடு.
பயமும் பட்டினியும்
நோயும் என இன்னமும்
எத்தனை காலத்திற்கு
நீ செத்துக்கொண்டேயிருக்கப்போகிறாய் ?

ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும்
ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும்
ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும்
ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும்
ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென
ஒரு பொதியையும் காவிக்கொண்டு
இன்னமும்எத்தனை காலத்திற்கு
அலையப் போகிறாய் ?

உன் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும் கழுகுகள்
காவிக்கொண்டு செல்வதையும்
கண்டுவிட்டுத்தான் மடிவேன் என
ஏன் அடம்பிடிக்கிறாய்?

அம்மா
இனி நீ இறந்து விடு.

அனைத்தும் பயனற்றுப்
போய்விட்டது என்பதை
அறிந்த பின்தான் போகவேண்டும்
என நீ அடம்பிடிப்பது
அறிவீனம் அம்மா.

ஏழு கோடி தமிழர்கள் உலகிலிருக்கிறார்கள்
ஈழத்தில் நாம் எவ்வாறு நாம் அனாதைகளானோம்
எனக் கேட்காதே

உலகில் பன்றிகளும்தானே
பலகோடிகள் இருக்கின்றன.
அவ்வப்போ முணுமுணுத்துக் கொள்வதைத்
தவிர அவையால் என்னதான் செய்யமுடியும்?

நீ இறந்த செய்தி வந்ததும்
தயாராகவிருக்கும் இடுப்புப்
பட்டியை நான் மாட்டிக்கொள்வேன்.

சிங்களமும் மந்திரம் செபிக்கும் பன்றிகளும்
ஒருமித்துக்கூறும் அப்போ
நான் ஒரு பயங்கரவாதியென்று.

நன்றி/அப்பால்தமிழ்
பார்க்கப்
பார்க்க
இதயம்
வலிக்கிறது!


பஞ்சில் தீவைத்துக் குளிர் காயும் சிங்களமே!
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றாடும் சிறுஇனமே!
அஞ்சிப் பதுங்குபவர் அழித்தாடும் இழிஇனமே!
மிஞ்சும் உன்வெறியால் அழிந்தொழியும் உன்படையே!

தலையிலே எதுவுமின்றித் தலைமைதாங்க மடையர்களை
தலைவர் என்றுநம்பி நீயெடுத்து வணங்குகிறாய்
தலையில் மயிரோடு மூளையும் அற்றவரை
தலைகெட்ட மடஇனமே! நீ நம்பி அனுப்புகிறாய்.

காடையர் கூட்டமொன்று அன்று வந்து புரட்சியென்று
நாட்டை அழிக்கப் பார்த்த நாளையும்நீ மறந்துவிட்டு
நாட்டைப் பிழைவழிக்குள் அனுப்பிடநீ உதவு கின்றாய்
நாட்டை அழிப்பதுதான் நாட்டைக் காப்பதுவா?

ஊடகம் என்று ஒரு கும்பல் வைத்திருந்து
ஊதாரித் தனமாகப் பொய்சொல்லி ஏய்த்து விட்டால்
-'சிந்தனைச் செல்வர்' எழிலன் உலகம் மயங்கிடலாம் எனநீயும் நம்புவது
உன்கண்ணைக் கட்டிப்பகல் இரவென்றே நம்புதல்தான்.

பார்க்கப் பார்க்க எங்கள் இதயம் வலிக்கிறது
தாக்கத் தாக்க எங்கள் உள்ளம் வலுக்கிறது
தோற்கத் தோற்க உங்கள் கோழைப் படைவெறியர்
பார்க்கப் பார்க்க எங்கள் விடுதலை விரைகிறது.

இரக்கம் என்பதினி இதயத்தில் சுரக்காது
உறக்கம் உயர்தமிழர் ஒத்துழைப்பில் இருக்காது
உரத்துக் குரல்கொடுத்து உலகத்தையே அசைத்திழுத்து
உதித்தே தமிழீழம் நிமிரும்வரை ஓயாது.
-- எழிலன்

Powered by Blogger

Subscribe to
Posts [Atom]